ரொனால்டோ புதிய உலக சாதனை…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதன்படி,யுனைடெட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

முன்னதாக,ரொனால்டோ 2003 ஆம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.அதன்பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் மற்றும் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வந்த நிலையில்,மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தது சமூக ஊடகங்களில் மிகவும் பேசும் பொருளானது.

இதனைத் தொடர்து,கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி ,வரும் 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது.இந்த போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த,உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அதன்படி,போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடும். மீதமுள்ள 31 நாடுகளும் தகுதி சுற்று மூலம் தேர்வுபெறும்.இதனால், உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,ரொனால்டோ புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.அதாவது,நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டியில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் இரண்டு கோல்களை அடித்த ரொனால்டோ,உலகளவில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.36 வயதான ரொனால்டோ இதுவரை 180 போட்டிகளில் விளையாடி 111 கோல்கள் அடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக,1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய அலி டாய் என்பவர்,149 போட்டிகளில் 109 சர்வதேச கோல்களை அடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த நிலையில்,நேற்று இரண்டு கோல்கள் அடித்ததன்மூலம்,அலி டாயின் சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.இதனால்,அவரது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.