கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதது தொடர்ந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் – மத்திய அரசு எச்சரிக்கை

மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில்லை என மத்திய அரசு வேதனை.

மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில்லை என்றும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதது தொடர்ந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லவ் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்பதற்காக அலட்சியம் காட்ட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என இணைச்செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் 24 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதே இல்லை, 45% பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை என்றும் 63% பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில்லை எனவும் குற்றசாட்டியுள்ளார். நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் 80 சதவீதம் 90 மாவட்டங்களில் இருந்து மட்டுமே கண்டறியப்படுகிறது.

மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு விகிதம் பதிவாகி வருகிறது என்றும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா பரவல் மத்தியில் கொடைக்கானலில் நேற்று திறக்கப்பட்ட 3 மூன்று பூங்காக்களை தற்காலிகமாக மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்