3 அமைப்புகள் பெற்ற நிதிகள் என்ன ? விசாரிக்க குழு அமைத்த மத்திய அரசு

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நிதிகள்  குறித்து விசாரிக்க உள்ளது மத்திய அரசு.

இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தான் ,சோனியா காந்தி தலைவராக இருக்கின்ற ராஜிவ் காந்தி அறக்கட்டளை சீனாவிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக பாஜக தேசிய தலைவர் நட்டா கூறினார் . நட்டாவின் கருத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பதிலில், ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான்.

ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது. இதில் என்ன தவறு.? 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது. சீன ஆக்கிரமிப்பை எப்படி,எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இது வரை பதிலில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஓன்று பதிவிடப்பட்டது.அந்த பதிவில், ‘ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி அறக்கட்டளை , இந்திரா காந்தி அறக்கட்டளை ஆகியவை பெற்ற நிதிகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.இந்த  விசாரணையை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் இந்த விசாரணைக் குழுவுக்கு  தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில் ,உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் உள்ளனர்.