அஸ்திவாரத்தையே அழிக்கிறது உங்கள் சட்டங்கள்..ராகுல் சரமாரி தாக்கு

புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தையே பலவீனமாக்கிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். .

இது குறித்து கூறிய ராகுல் காந்தி மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும். எனவே விவசாயிகள் நலன் கருதி  அச்சட்டங்களை பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்யவேண்டும்.

கொரோனாப் பரவலில் நாடு கடினமான சூழல்களை சந்தித்துவரும் வேளையில், சமூகத்தின் எளிய பிரிவினரான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், சிறுதொழில்புரிவோர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் விவசாயிகளின் நிலை பற்றி அனைவருக்கும் தெரியும். விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை தினமும் படித்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் அதனையெல்லாம் தற்போது இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டதைப் போல அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருகிறது.

இதை நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில்புரிவோரை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.இதன் மூலம் நாட்டின் நலனை பாதுகாக்க முடியும்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை போல, இளைஞர்களும், குழந்தைகளும் கூட நம் நாட்டின் எதிர்கால அஸ்திவாரங்களே அவர்களுக்கு நாம் உரிய வாய்ப்பு வழங்க தவறிவிட்டால்  நாட்டின் எதிர்காலத்தை பலவீனமாக்குகிறோம் என்று உணரவேண்டும்.

நாட்டில் விவசாயிகள் தாக்கப்படுவது என்னை வேதனைப்படுத்துகிறது. விவசாய விளைபொருட்களுக்கான மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும். மண்டி, குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதல் முறைகளில் குறைபாடுகள் இருக்கிறது இவற்றை சரிசெய்ய வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த அமைப்பையும் சிதைத்துவிட கூடாது.

அவ்வாறு செய்தால் நாட்டின் ஒட்டுமொத்த அஸ்திவாரமே சேதம் அடைந்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இதனால்தான் மூன்று புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து போராடுகிறோம் என்று தெரிவித்தார்.

author avatar
Kaliraj