#IPL2021: “சென்னை அணியை பாத்து கத்துக்கோங்க”- பஞ்சாப் அணிக்கு சேவாக் அறிவுரை!

சென்னை அணியில் ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்துகிறார்கள். இதேபோலத்தான் பஞ்சாப் அணியும் செயல்பட வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே அடித்தது. அதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 16.4 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் வெறும் 123 ரன்கள் மட்டும் அடித்ததை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் மோசமாக இருப்பதாக கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “பந்துவீச்சில் பலமாக இருக்கும் பஞ்சாப் அணி, அதிரடி வீரர்கள் இருந்தும் பேட்டிங் வரிசையில் சிறப்பானதாக இல்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான செயல்பட்டனர். ஆனால், பேட்டிங் வரிசை கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. இதனால் கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் உள்ளிட்டஅதிரடி ஆட்டக்காரர்கள், நெருக்கடியுடன் விளையாடுகிறார்கள். இவர்களைச் சுதந்திரமாக விளையாட அனுமதித்தால்தான் ரன்களை குவிக்க முடியும்.

மேலும், துவக்க வீரர்கள் நிதானமாக விளையாடுவதுதான் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், சென்னை அணியில் பேட்டிங் வரிசை சிறப்பானதாக இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்துகிறார்கள். இதேபோலத்தான் பஞ்சாப் அணியும் செயல்பட வேண்டும். ஒரே ஒரு வீரரை மட்டும் நம்பியிருக்க கூடாது.

நாம் நிதனமாக விளையாடி பவர் பிளேவில் விக்கெட்டை கொடுக்கவில்லை என்றால், அடுத்து கெய்ல், பூரன் போன்றவர்கள் அதிரடி காட்டுவார்கள் என நம்புகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடுவதால், மற்ற வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதை பஞ்சாப் அணி உணர வேண்டும்” என்று கூறினார். அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போல் செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார்.