“விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வோம்” -பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் அறிவிப்பு..!

மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுப்பதாக பஞ்சாப் மாநில புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார்.

இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்பின்னர்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் கட்சியின் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறியதாவது:”பஞ்சாப் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறது.அதன்படி,விவசாயிகளின் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வோம்.குறிப்பாக,மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுமாறு நாங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாப் மக்களுக்காக கேப்டன் அமரீந்தர் சிங் நிறைய நல்ல வேலைகளை செய்தார். அவரது பணியை நாங்கள் முன்னெடுப்போம்.காங்கிரஸ் ஒரு சாதாரண மனிதனை முதல்வராக்கியது.இதனால்,காங்கிரஸ் கட்சி  முதல்வர் அல்லது அமைச்சரவை அல்ல.மாறாக,கட்சி ஒரு சுப்ரீம்.எனவே, கட்சியின் சித்தாந்தத்தின் படி அரசு செயல்படும்”,என்று தெரிவித்துள்ளார்.