தாலிபான்களிடம் பணிந்த பஞ்ச்ஷிர் தேசிய எதிர்ப்பு படை…!

ஆப்கானிஸ்தானிலுள்ள தேசிய எதிர்ப்பு படை பஞ்ச்ஷிர் மாகாணத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் தெரிவித்தனர். மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதியோடு முழுமையாக வெளியேறிவிட்டது. இதனை அடுத்து புதிய அரசு அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்கள் தலிபான்கள் கைவசம் உள்ளது. இருப்பினும் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே பஞ்ச்ஷிர் போராளிகள் தலிபான்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர். அண்மையில், தலிபான்கள் பஞ்ச்ஷிர் மாகாணத்தின் தலைநகரை சுற்றியுள்ள மாவட்டங்களை கைப்பற்றி விட்டதாகவும், மாகாண தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து பஞ்ச்ஷிர் எல்லையை விட்டு வெளியேறினால் தாலிபான்களுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக பஞ்ச்ஷிர் போராளிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தலிபான்கள் பஞ்ச்ஷிர் பகுதியில் உள்ள தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமெனவும், படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும், அதற்கு பதிலாக நாங்களும் எங்கள் படைகளை ராணுவ நடவடிக்கையில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துகிறோம் எனவும் பஞ்ச்ஷிர் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal