#Breaking:50 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் பட்டியலை துணை ஆளுநரிடம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்…!

50 நாட்களுக்குப் பிறகு,புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை,அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள்,துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இன்று கொடுத்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.

பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.

பின்னர்,புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர்  சிவா ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக அமைச்சரவைக்கான பெயர் பட்டியலில் ஜான்குமார் அவர்களின் பெயர் இடம்பெறாதால்,அவரின் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தை சூறையாடினர்.இதனால்,அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போனது.

இந்நிலையில்,50 நாட்களுக்குப் பிறகு,புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை,அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள்,துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இன்று கொடுத்துள்ளார்.

இதனையடுத்து,அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்,மத்திய உள்துறை அனுமதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார்.அதனைத் தொடர்ந்து,வரும் 27-ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.