பொங்கல் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை -தமிழக அரசு அறிவிப்பு

வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி,தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25 -ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.அரசு இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்படன் செயல்பட்டு வருகிறது .அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில்,மெரினா  உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் வருகின்ற 16-ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அண்ணா பூங்கா, மாமல்லாத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிலும் மற்றும் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பாவும் அபாயம் உள்ளதைக் கருத்தில் கொண்டு,முன்னெச்சரிக்கையாக இதனை தடுக்கும் வகையில் ,மேற்கண்ட அனைத்து இடங்களிலும் வருகின்ற 15,16 மற்றும் 17ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் அனுமதி இல்லை.

கொரோனா நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.