சற்று நேரத்தில் கே.எஸ் அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

உத்தரப்பிரதேசம் ஹத்ரஸ் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கே.எஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூற முற்பட்ட திரு. ராகுல் காந்தி அவர்கள் காவல்துறையினர் தடுத்து வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் அராஜக நடவடிக்கை காரணமாக ராகுல் காந்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கீழே தள்ளப்பட்ட செய்தி மிகுந்த வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது. உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடைபெறுவதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது

பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற மக்களவை உறுப்பினராக இருக்கிற திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயன்ற அவரை உத்தரபிரதேச போலிசார் தடுத்து நிறுத்தியதோடு, கைது செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை திரு. ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் இதற்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து எனது தலைமையில் இன்று மாலை 5.30 மணியளவில் சத்தியமூர்த்தி பவன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர்  பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan