6 நகரங்களில் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கள் நாட்டினார் பிரதமர் மோடி

ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் – இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

கலங்கரை விளக்கத் திட்டங்கள் :

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,நாட்டிலேயே முதல்முறையாக, கட்டுமானத் தொழிலில் புதுயுக மாற்று சர்வதேசத் தொழில்நுட்பங்கள், பொருள்கள் மற்றும் நடவடிக்கைகளை கலங்கரை விளக்கம் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் எடுத்துக் காட்டுகின்றன. வீட்டுவசதிக் கட்டுமானத்துறையில் முழுமையான வகையில் புதுமைத் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்பச் சவால் – இந்தியாவின் கீழ் இவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர், குஜராத்தில் உள்ள ராஜ்கோட், தமிழ்நாட்டில் சென்னை, ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, திரிபுராவில் உள்ள அகர்தலா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ ஆகிய நகரங்களில் கலங்கரை விளக்கத் திட்டங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இடத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வாழ்வதற்குத் தயாரான வீடுகளை 12 மாதங்களுக்குள் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுமானத்துடன் ஒப்பிடும் போது இவற்றின் செலவு குறைவாகவும், அதேசமயம் இந்த வீடுகள் அதிக தரத்துடனும் நீடித்து நிற்கும் வகையிலும் இருக்கும்.

இந்தூரில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட அமைப்பு, ராஜ்கோட்டில் ஒற்றைக்கல் கட்டுமானத் தொழில்நுட்பம், சென்னையில் முன்வார்ப்பு கான்கிரீட் கட்டுமான அமைப்பு, ராஞ்சியில் முப்பரிமாண முன்வார்ப்புக் கட்டுமான அமைப்பு, அகர்தலாவில் எஃகுக் கட்டமைப்பு கொண்ட இலகு பலகம், லக்னோவில் பிவிசி அமைப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கலங்கரை விளக்கத்திட்டங்கள் பயன்படுத்துகின்றன. இத்துறையில் தொழில்நுட்பப் பகிர்தல் மற்றும் அதன் மறுபயன்பாட்டுக்கு நேரடி ஆய்வகங்களாக கலங்கரை விளக்கத் திட்டங்கள் திகழும். ஐஐடிக்கள், என்ஐடிக்கள், இதர பொறியியல் கல்லூரிகள், திட்டமிடுதல் மற்றும் கட்டுமானக் கல்லூரிகள் ஆகியவற்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கட்டுமானர்கள், தனியார் மற்றும் பொதுத்துறைப் பணியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு திட்டமிடுதல், வடிவமைப்பு, பொருள்களின் உற்பத்தி, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனை ஆகியவற்றை இது உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.