இந்தியாவை நோக்கி…இஸ்ரேல் பிரதமர் ஏப்ரல் 2 ஆம் தேதி வருகை!

கடந்த அக்டோபரில் கிளாஸ்கோவில் நடந்த ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) பிரதமர் மோடி கலந்து கொண்டபோது,இஸ்ரேல் பிரதமர் பென்னட்டை இந்தியாவுக்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், வருகின்ற 2 ஏப்ரல் 2022 சனிக்கிழமையன்று,இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த பயணம் நாடுகளுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும், இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை நிறுவிய 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமை மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இணையம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும் என்று கூறப்படுகிறது.