கலிபோர்னியாவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலி மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
வடக்கு கலிபோர்னியாவில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 11 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி முழுதும் மின்சாரம் தடைபட்டுள்ளது, இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மேலும் எரிவாயுக்குழாய்கள்(Gas Lines) உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் கட்டிடத்தில் தீப் பற்றிக்கொண்டது.
தீயணைப்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர், மற்ற இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளார்களா என மீட்புக்குழுவினர் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.