சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று முதல் தொடக்கம்!

Election2024: சென்னையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 4ம் தேதி தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. அன்றிலிருந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.  அதன்படி, 11,369 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 63,751 பேர் என மொத்தம் 75,120 பேர் தபால் வாக்கு செலுத்த தகுதியானவர்கள் என கூறப்படுகிறது.

இதில், மாற்றுத்திறனாளிகள் 366 பேரும், 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4,176 பேரும் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்