அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் – மத்திய அரசு முடிவு

அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவை பொருத்தவரை தலைமைதேர்தல் ஆணையம் தயாரிக்கும் வாக்காளர் பட்டியல் மூலம்  தேர்தல்கள் நடைபெறுகின்றது.அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களும் அரசியல் சாசன விதிகளின்படி  தனியாக வாக்காளர் பட்டியலை தயாரிக்கின்றது.இந்திய தேர்தல் ஆணையம் ,வாக்காளர் பட்டியலை தயாரிக்க பல்வேறு  மாநில தேர்தல் ஆணையங்களை பயன்படுத்திக்கொள்கின்றது.தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் மூலம் மாநிலங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும்  தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இதனால் இருமுறை வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றது. எனவே கூடுதல் செலவு இதனால் ஏற்படுகிறது.ஒரு சில சமயங்களில்  வாக்காளர் பட்டியலில் ஒரு சில வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுவிடுகிறது .இதனால் தேவை இல்லாத குழப்பம் ஏற்படுகிறது.இந்த குழப்பத்தை தவிர்க்க வரும் காலங்களில் மக்களவைத் தேர்தல் , மாநில சட்டசபைத் தேர்தல் , உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றிக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக  மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்த மாத தொடக்கத்தில்  ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆலோசிக்க பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கூட்டத்தில் சட்ட அமைச்சகத்தினர்  மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டு  கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.மேலும் மாநிலங்கள் உள்ளாட்சி தேர்தலுக்கும்  இந்திய தேர்தல் ஆணையம் தயாரிக்கும்  வாக்காளர் பட்டியலையே  பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  அரசின் இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையம் ,சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளது.