பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மண்டை உடைப்பு!

சென்னை வடபழனியில் காலையில் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்த பெண் ஒருவருக்கு காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்ததில் காவலரின் மண்டை உடைந்து உள்ளது.

தற்போதைய கால கட்டங்களில் தமிழகத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் சில நேரங்களில் மிக கடுமையாகவே இருந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களை அச்சுறுத்தக்கூடிய செயல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. பயிரை காக்க வேண்டிய வேலியே பயிரை மேய்ந்தது போல தற்பொழுது ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை வடபழனியில் இன்று காலை பேருந்தில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு அங்கிருந்த காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பணிமுடிந்து வீட்டுக்கு மதுபோதையில் திரும்பிய காவலர் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்த மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்ததில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வடிந்து உள்ளது. மேலும் அவ்விடத்திற்கு விரைந்த மற்ற காவல்துறையினர் அவரை அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவலர் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தும் காவலரை பொதுமக்கள் அடித்து மண்டையை உடைத்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal