திருச்சியில் போலீஸ் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி பெண் பலி …கணவர் படுகாயம்…

திருச்சி திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காவலர் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை 3000 பேர் சாலை மறியல் செய்ததால்  ஸ்தம்பித்தது.

இன்று மாலை திருச்சி துவாக்குடி அருகே வாகன சோதனை நடந்துக்கொண்டிருந்தது. அப்போது திருச்சி துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்த உஷா மற்றும் ராஜா தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உஷா குழந்தையின்மை சிகிச்சை பெற்று தற்போது கர்ப்பிணியாக இருந்தார். அதனால் வாகனத்தை ராஜா மெதுவாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது திருச்சி கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சிலர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராஜா, கணேஷ் தம்பதிகள் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர். ராஜா ஹெல்மட் அணியவில்லை.

இதனால் பயந்துபோன அவர் தவிர்ப்பதற்காக சென்றபோது ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்ட ஊர்க்காவல் படையினர் விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். இதில் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜாவின் மோட்டார் பைக் சாலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சாலையில் விழுந்த உஷா மீது பின்னால் வந்த வேன் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் கீழே கிடந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர்கள், ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கொந்தளித்து திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பல கிலோ மீட்டர் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சக்தி கணேஷ் ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆய்வாளர் காமராஜ் மதுபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment