2026ல் பாமக ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

டெல்லி உச்சநீதிமன்றம் தடை போட்டாலும் இட ஒதுக்கீட்டை நிச்சயம் பெறுவோம் என பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் ‘2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2022-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026ல் பாமக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்து பாமக ஆட்சி நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் என்ற பதவி ஆசை, வெறி இல்லை, தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். என்பதற்காகவே, தமிழ்நாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும் என்பதே இலக்கு. ஒருமுறை அதிகாரம் நம்மிடம் கிடைத்தால் நாட்டின் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தலாம் என்றும் கூறினார்.

10.5 % உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவில்லை என்றாலும், அதை பெற்றே தீருவோம், அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. வன்னிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிச்சயம் உள் ஒதுக்கீட்டை பெறுவோம்.

இந்தியாவிலேயே சமூக நீதிக்கான பாடுபட கூடிய கட்சி பாமக. கட்சி தொடங்கி 32 ஆண்டுகளாகியும் நாம் ஆட்சிக்கு வராதது வலியை ஏற்படுத்துகிறது. அடுத்த தேர்தலில் மக்கள் நிச்சயம் திமுகவுக்கு வாய்ப்பு தர போவதில்லை. நமக்கு தான் வாய்ப்பு தர போகிறார்கள், அரசியல் களம் தற்போது காலியாக உள்ளது. அதற்கு பாமகவினர் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்க விரும்புகிறோம் என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட தனி அணி அவசியம் எனவும் குறிப்பிட்டார். மேலும், கூட்டணி என்றால் அது பாமக தலைமையில்தான். பாமக தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சி வருவது என்றால் கூட்டணிக்கு வரலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்