#PMCARES:”இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம்” – பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்!!

கடந்த மார்ச் 11, 2020 முதல் பிப்ரவரி 8, 2022 வரையிலான காலகட்டத்தில், கொரோனா தொற்று நோயால் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது எஞ்சியிருக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக,குழந்தைகளுக்கான PM CARES திட்டம் கடந்த மே 29, 2021 அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டம் மூலம்,பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகள் 23 வயதை எட்டியவுடன் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. மேலும்,கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை மூலம் குழந்தைகளை மேம்படுத்தி,அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதன் மூலம், குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.மேலும்,இந்தத் திட்டம் அவர்களின் நலனை மருத்துவ காப்பீடு மூலம் உறுதி செய்கிறது.

இதனிடையே,நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்காக PM CARES திட்டத்தின் கீழ் பலன்கள் இன்று வெளியிடப்படும் எனவும்,இந்த முயற்சியின் மூலம்,கொரோனாவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும் பிரதமர் மோடி முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில்,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் நரேந்திர மோடி தற்போது வழங்கியுள்ளார். மேலும்,இந்நிகழ்வின் போது குழந்தைகளுக்கான PM CARES இன் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு மருத்துவ காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து,நிகழ்ச்சயில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “கொரோனாவால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் இந்த மாற்றம் எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன்.ஒவ்வொரு நாளும் போராட்டம், ஒவ்வொரு நாளும் தவம்.இன்று நம்முடன் இருக்கும் குழந்தைகளின் வலியை வார்த்தைகளில் சொல்வது கடினம்.

மேலும்,பெற்றோர் வழங்கிய அன்பையும், பராமரிப்பையும் யாராலும் ஈடு செய்து விட முடியாது.எனினும்,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் துணை நிற்கிறார்கள்.அந்த வகையில்,நான் பிரதமராக அல்ல உங்கள் குடும்ப உறுப்பினராகவே பேசுகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,பேசிய பிரதமர் கூறுகையில்:”இக்குழந்தைகளின் தொழில்முறை படிப்புகளுக்கு,உயர்கல்விக்கு கல்விக் கடன் தேவைப்பட்டால்,PM-CARES அதற்கும் உதவும்.மேலும்,கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment