5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் கோயில் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் சேகர்பாபு..!

இந்து சமய அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக கோயில் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.  பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:

“கொரோனா தொற்று காரணமாக கோயில்கள் நீண்ட நாட்கள் மூடப்பட்டு இருந்த நிலையில்,தற்போது,கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே,கோயில்களில் உள்ள திருமண மண்டபங்களில் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 4 கோடி பக்கம் உள்ள ஆவணங்களை தற்போது டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, கோயில் நிலங்களில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்கள், கோயில்களின் வரவு, செலவு கணக்குகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் வெளியிடப்படும்.

முன்னதாக,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அவ்வாறு உண்மையிலேயே மீட்கப்பட்டு இருந்தால் அவற்றின் பட்டியலை வெளியிட வேண்டும்.எனினும்,தற்போது திமுக ஆட்சியில் கோயில் நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.அதன்படி,கடந்த 55 நாட்களில் கோயில்களுக்கு சொந்தமான ரூ.520 கோடி மதிப்புள்ள 79.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

அறநிலையத் துறையில் 40 ஆயிரம் பேருக்கு பணி வழங்குவதற்கான விவரங்களை திரட்டி வைத்ததாகவும், தற்போது அவர்களை விடுவிக்குமாறு அறநிலையத்துறை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

அறநிலையத் துறையில் பணியாற்றுபவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சம்தான். எனவே, இது உண்மைக்கு புறம்பான கருத்து. அவ்வாறு உண்மையிலேயே நடந்து இருந்தால் அவர்களின் பட்டியலை அவர் வெளியிட வேண்டும்”,என்று தெரிவித்தார்.