ஆயுர்வேத கொரோனா மருந்தால் நெல்லூருக்கு குவியும் மக்கள்..!

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் பலரும் பாதித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு அருகில் முத்துக்கூறு என்ற கிராமத்தில் ஆனந்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கொரோனாவுக்கு இலவசமாக ஆறு விதமான ஆயுர்வேத மருந்தை வழங்கி வருகிறார்.

இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா சரி ஆகிறது என்ற செய்தி அம்மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டதால் கொரோனா நோயாளிகளும், பொதுமக்களும் இந்த மருந்தை வாங்கி செல்ல கூட்டம் கூட்டமாக அந்த இடத்திற்கு குவிந்து வந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 40,000 பேருக்கும் அதிகமானோர் அந்த இடத்திற்கு வந்ததால், சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது. மேலும், இந்த மருந்தை வாங்கி செல்ல 3 கிமீ தொலைவு வரை வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் அங்கு மக்களை வரிசைப்படி நிற்க வைத்தனர்.

இப்படி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த பொதுமக்களால் 3 ஆவது அலை குறித்த அச்சம் அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் இந்த லேகியத்தை ஆய்வு செய்ய மத்திய ஆயுஷ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் முடிவு வரும்வரை லேகியத்தை வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், இந்த லேகியத்தை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இதனை ஆய்வு செய்து அனுப்புமாறு மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும் ஆயுர்வேத சொட்டுமருந்தை கண்ணில் தொடர்ந்து உபயோகிப்பதால் கண்பார்வை பாதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பயன்படுத்திய எவரும் இதை பற்றி எந்த புகாரும் அளிக்கவில்லை.  இந்த லேகியத்தை சாப்பிட்ட பிறகு கொரோனா பாதிப்பு குணமடைந்ததாகவும், பக்க விளைவுகள் ஏதும் வரவில்லை என்றும் தெரிவித்தனர். அதனால், தற்போது இந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் குறித்து பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.