பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குடியிருப்பு இல்லம் வாடகைக்கு.. ஏன் தெரியுமா?

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குடியிருப்பு இல்லம் வாடகைக்கு கிடைக்கும் என அறிவிப்பு.

பாகிஸ்தான் பிரதமர் தனது நாட்டில் தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு வித்தியாசமான வழியைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது, பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகபூர்வ குடியிருப்பு இல்லம் (official residence) இப்போது திருமணங்கள், பேஷன் ஷோக்கள் மற்றும் பிற சமூக நிகழ்வுகளுக்கு வாடகைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம், ஆளும் கட்சியான தெஹ்ரிக்-பாகிஸ்தான், தெஹ்ரிக்-இ-இன்சாப் (PTI), பிரதமரின் இல்லத்தை ஒரு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு கட்சி விரும்புவதாக அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, பிரதமர் வளாகத்தைக் காலி செய்துவிட்டு, அவரது பானி காலா இல்லத்திற்கு (Bani Gala residence) சென்றார். ஆனால், அங்குள்ள அலுவலகத்தை பயன்படுத்தி வந்தார்.

இதற்கு முன்னதாக பிரதமர் குடியிருப்பு இல்லத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவ மத்திய அமைச்சரவை முடிவு செய்ததை தொடர்ந்து, தற்போது பிரதமர் இல்ல வளாகத்தில் மக்கள் கலாச்சார, பேஷன், கல்வி மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடிவு செய்துள்ளது என உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவை பல்கலைக்கழகத்தின் திட்டத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் இல்லத்தை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதாக (Samaa TV) கூறியுள்ளது. பிரதமரின் இல்லத்தில் அலங்காரம் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்புள்ள இரண்டு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

உள்ளூர் ஊடகங்களின்படி, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் இல்லத்தின் மூலம் வருவாயைப் பெறுவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கும் என்றும் ஆடிட்டோரியம், 2 விருந்தினர் பிரிவுகள் மற்றும் ஒரு புல்வெளியை வாடகைக்கு விட்டு நிதி திரட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உயர் மட்ட செயல்பாடுகள், சர்வதேச கருத்தரங்குகள், பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் முதன்மை பணியிடத்திலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இம்ரான் கான் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தானின் பொருளாதாரம் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களால் குறைந்தது.

இதனால் நாட்டின் அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்க இம்ரான் கான் புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார். முன்னாள் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில், பிடிஎம் நிர்வாகம் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படுவதாகக் கூறி, இம்ரான் கான் பொறுப்பேற்றதில் இருந்து அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கடன்கள் ரூ. 45,000 பில்லியன் உயர்த்தப்பட்டுள்ளது என்று குற்றசாட்டியுள்ளார்.

மேலும் பதவியேற்ற பிறகு, இம்ரான் கான் பொது நலத் திட்டங்களுக்கு செலவிட அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று அறிவித்தார். அதே நேரத்தில் நாட்டில் சிலர் எஜமானர்கள் வாழ்வது போல் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்