தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை..! எதிர்கட்சிகள் கூறுவது தவறு: மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் பேச்சு

மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறும் எதிர்கட்சிகளின் அறிக்கைகள் தவறானது என்று மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் தனது உரையின் போது குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தேனி மாவட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, “சுமார் 10 ஆண்டுகளாக எனது தொகுதியில் நிலுவையிலிருந்த பணிகளை விரைந்து முடிக்க ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ததற்காக நமது பாரத பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு நன்றி. போடிநாயக்கனூர் முதல் மதுரை வரையிலான அகலப்பாதை திட்டப் பணிகள் நமது பாரத பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. பட்ஜெட்டில் 2024-25 நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.1,27,469 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடுகு, நிலக்கடலை, எள், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி போன்ற முக்கிய எண்ணெய் விதைகளில் கவனம் செலுத்தும் தொலைநோக்கு ஆத்ம நிர்பார் எண்ணெய் விதைகள் அபியான் திட்டத்தினை அறிமுகப்படுத்தியதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீன்வளத் துறைக்கு ரூ.2584 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். இதேபோல், பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தை செயல்படுத்த ஐந்து ஒருங்கிணைந்த அக்வா பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டு! மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்

மன்னார் வளைகுடா பகுதி, உலகின் வளமான கடல் பல்லுயிர் மண்டலம் மற்றும் ராமநாதபுரம் கடற்கரையோரம் உள்ள பால்க் ஜலசந்தி, ராமநாதபுரத்தில் உள்ள கிட்டத்தட்ட ரூ.1.68 லட்சம் மீனவ சமூகத்தின் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது. இப்பகுதி கிராமங்களில் பெண்களுக்கு கடல்மூலம் கிடைக்கும் வருமானம் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த அக்வா பூங்கா அமைக்கப்படுமானால் அது மீனவ சமூகத்திற்கு மிகப் பெரிய மாற்று வருமான ஆதாரமாக இருக்கும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற நமது அரசின் பரந்த பார்வையைப் பார்த்தால், தமிழகத்துக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை என்று தமிழக எதிர்க்கட்சிகள் இந்த அவையில் தவறான அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால், 2014 – 2023 வரையிலான 10 ஆண்டு கால இந்திய அரசு எனது தமிழக மாநிலத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தியதற்காகவும், தமிழகத்துக்கு ரூ.2,47,000 கோடியை ஒதுக்கியதற்காகவும், நமது பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மறுபுறம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பத்தாண்டு காலத்தில், குறைந்தபட்ச தொகையான ரூ. 95000 கோடி மட்டுமே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எனது தேனி நாடாளுமன்றத் தொகுதியின் மக்களின் நீண்டகால கனவான திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான ரயில் சேவைக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து துவக்க நிதியமைச்சர் மூலமாக அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Comment