#AUSvIND: சிட்னி மைதானத்தில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி!

கொரோனா பரவல் காரணமாக சிட்னியில் நடைபெறவுள்ள 3 ஆம் டெஸ்ட் போட்டியில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 3 ஆம் டெஸ்ட் போட்டி சிட்னியில் இம்மாத 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், சிட்னி கடற்கரை பகுதியில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சிட்னி மைதானத்தில் நடைபெறும் மூன்றாம் டெஸ்ட் போட்டியை காண 25 சதவீத பார்வையாளர்களுக்கு (9,500 இருக்கைகளுக்கு) மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே டிக்கெட் புக் செய்த ரசிகர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படுகிறதாக கூறப்படுகிறது.