BJP Manifesto: ஒரே நாடு ஒரே தேர்தல்..ரூ.1 க்கு நாப்கின், 3 கோடி பேருக்கு வீடு… வெளியான பாஜக தேர்தல் அறிக்கை..!

BJP Manifesto: பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்,  பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக  நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. வருகின்ற லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களிலும் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில், இன்று  பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை 76 பக்கங்களைக் கொண்டது.  பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். “சங்கல்ப் பத்ரா” என்ற பெயரில் பாஜக சார்பில்  வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில், ராமாயண விழா கொண்டாடுவது, அயோத்தியை மேலும் மேம்படுத்துவது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீதித்துறை சட்டத்தை நாட்டில் அமல்படுத்துவோம் என பாஜக உறுதியளித்துள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் பணிகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே தொடர்பான தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படிரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பிரச்னை முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கில் புல்லட் ரயிலுக்கான பணிகள் நடைபெறுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.

பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும்.

70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்படும்.

திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.

பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இலவச உணவு தானியம் வழங்கப்படும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

பெண்களின் சுகாதரத்தை உறுதி செய்ய ரூ.1 க்கு சானிட்டர் நாப்கின் வழங்கப்படும்.

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும்.

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்பு.

author avatar
murugan