வதந்திகளுக்கு மத்தியில் தோன்றிய வடகொரிய அதிபர் ! அவரை பார்த்ததில் மகிழ்ச்சி- அமெரிக்க அதிபர் ட்வீட்

வடகொரிய அதிபர் கிம்மை  பார்த்ததில் மகிழ்ச்சியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி கிம்  ஜாங்கின்  தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் இந்த  ஆண்டு விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை.இதன் பின்னர் தொடர்ந்து அவரை பார்க்க முடியவில்லை  அவருக்கு மதுப் பழக்கம், புகைப்பிடிப்பது, உணவுப் பழக்கம் உள்ளிட்டவற்றால் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சமீபத்தில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் அதிகம் உலாவி வந்தது.இது குறித்து சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியிலும் கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.சர்வதேச அளவில் இந்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டது.

இதற்கு வடகொரியா சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.பின்னர் வடகொரியா  அதிபர் கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தென் கொரியா உறுதியாக கூறியது. இப்படிப்பட்ட   வந்ததிகளுக்கு மத்தியில்  தான் பொது நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்களை வடகொரியாவின் செய்தி நிறுவனம் வெளியிட்டது.இந்த புகைப்படங்கள்  வைரலாகியது.

வடகொரியா செய்தி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.