மாஸ்க் இல்லைனா பெட்ரோல் இல்லை – ஒடிசா அதிரடி

ஒடிசாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் மார்ச் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே ஒடிசாவில் கொரோனாவால் 48 பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் அங்குள்ள பெட்ரோல் பங்குகளில் முகக்கவசம் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விதிமுறைகளை அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி அம்மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1,600 பெட்ரோல் பங்குகளில் முகக்கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அங்குள்ள பல்வேறு பகுதிகளிலும் மளிகை மற்றும் காய்கறி கடை உரிமையாளர்களும் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்