“ஒரு போதும் கற்பனை செய்யவில்லை” – கண்ணீர் மல்க விடைபெற்ற லியோனல் மெஸ்ஸி..!

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுவதை கண்ணீர் மல்க லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) பார்சிலோனா கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார்.இந்த நிலையில் பார்சிலோனா அணியுடன் மெஸ்ஸி செய்து இருந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது.

மெஸ்ஸி விளையாட்டமாட்டார்:

இதனால், மேலும் 5 ஆண்டுகள் பார்சலோனா அணிக்கும், மெஸ்ஸிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில்,நிதி மற்றும் பொருளாதரக் கட்டுப்பாடுகள் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று பார்சிலோனா அணி நிர்வாகம் கூறியது.மேலும்,நேற்று முன்தினம் இனி பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாட்டமாட்டார் என பார்சிலோனா அணி நிர்வாகம் அறிவித்தது.

கண்ணீர்:

இந்நிலையில்,இன்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் விடை பெறுவது குறித்து கண்ணீர் மல்க பேசமுடியாமல் சிறிது நேரம் தவித்தார்.அப்போது அங்கிருந்தவர்கள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“21 வருடங்களுக்குப் பிறகு நான் என் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கிளம்புகிறேன்.இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.நான் வந்த முதல் நாள் முதல் கடைசி வரை இந்த கிளப்பிற்காக எல்லாவற்றையும் கொடுத்தேன். நான் விடைபெற வேண்டும் என்று கற்பனை செய்ததில்லை.

சமீப நாட்களில் நான் என்ன சொல்ல முடியும் என்று நிறைய யோசித்தேன், உண்மையை சொல்ல என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை.பல வருடங்கள் கழித்த பிறகு,அணியை விட்டு செல்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது .என் வாழ்நாள் முழுவதும்,இதற்கு நான் மனதளவில் தயாராக இல்லை.

ஊதியத்தை குறைத்தேன்:

பார்சிலோனா அணியில் இருப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.எனது ஊதியத்தில் 50 சதவீதத்தை குறைக்கவும்  ஒப்புக்கொண்டேன்.ஆனால்,நான் 30 சதவீதம் கூடுதலாக ஊதியம் கேட்டதாக கூறப்படுவது தவறான தகவல்”,என்று தெரிவித்தார்.

சாதனை:

மெஸ்ஸி கடந்த 2000 ஆம் ஆண்டு 13 வயது இருக்கும்போது பார்சிலோனா அணியில் இணைந்தார்.13 வயது முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த மெஸ்ஸி 21 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.இதுவரை மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 778 போட்டிகளில் விளையாடி 672 கோல்களை அடித்துள்ளார்.இதன்மூலம், முன்னதாக வேறு ஒரு கிளப் அணிக்காக கால்பந்து ஜாம்பவான் பீலே 643 கோல்கள் அடித்திருந்ததே சாதனையை, மெஸ்ஸி முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

மேலும்,ஆறு முறை பலோன் டி’ஓர் விருதை வென்றுள்ளார்.மேலும்,10 லீக் பட்டங்கள், 4 முறை சாம்பியன் லீக் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக மெஸ்ஸி எந்த அணியுடன் இணைவார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை,எனினும் Paris St Germain அணியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.