மோசடி வழக்கில் கைதான நீரவ் மோடி .! ஒப்படைப்பு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.!

மோசடி வழக்கில் லண்டனில் கைதான நீரவ் மோடியை இந்தியாவிற்கு ஒப்படைக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை இன்று தொடங்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, கடந்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், இவரை இந்தியாவிற்கு திருப்பி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கோரி இந்திய அரசு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அதன்படி இந்திய அரசின் கோரிக்கையின் படி ஐந்து நாள் ஒப்படைப்பு விசாரணை தொடங்கப்பட்டது. அதன் முதல்கட்ட ஒப்படைப்பு விசாரணை மே மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை, கொரோனா கட்டுபாட்டுகள் காரணமாக லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறை அறையிலிருந்து வீடியோ கால் வாயிலாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று  தொடங்கப்பட்டது.

அதில் இது குறித்த கூடுதல் விசாரணையை நவம்பர் 3-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ,அதில் ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இறுதி டிசம்பர் மாதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.