T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற நமீபியா.. ஒரு இடத்திற்கு 3 அணிகள் போட்டி..!

நமீபியா அணி அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆப்பிரிக்கா குவாலிஃபையர்ஸ் போட்டியில் இருந்து தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை நமீபியா பெற்றது. நமீபியா ஐந்து போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனால் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கடைசி ஒரு இடத்திற்கு ஜிம்பாப்வே, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன.

தான்சானியா தோல்வி: 

ரிச்சர்ட் எராஸ்மஸ் தலைமையிலான நமீபிய அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. தகுதிச்சுற்று இறுதி ஆட்டத்தில் நமீபியா 58 ரன்கள் வித்தியாசத்தில் தான்சானியாவை வீழ்த்தியது. தகுதிச் சுற்று முழுவதும் நமீபியா சிறப்பாக செயல்பட்டது. இன்று நடைபெற்ற கடைசி தகுதிச் சுற்றில் தான்சானியா டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் இறங்கிய நமீபியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. நமீபியா அணிக்காக ஜேஜே ஸ்மித் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 40* ரன்கள் எடுத்தார். 158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தான்சானியா அணி 20 ஓவர்  முடிவில் 99 ரன்களை மட்டுமே எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற அணிகள்: 

இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,  நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா என 19 நாடுகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன.

author avatar
murugan