மதுரை துணை மேயர் மீது கொலை முயற்சி.? எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் போராட்டம்.!

மதுரை துணை மேயராகவும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகராட்சி குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்து வரும் நாகராஜனின் வீடு மற்றும் அலுவலகம் மீது மர்ம நபர்கள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர்.

இவரது வீட்டிற்கு நேற்று வந்த 2 மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களோடு நாகராஜனை தாக்க முற்பட்டுள்ளனர். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட நாகராஜன் தனது மனைவி, குழந்தைகளை சட்டென்று அழைத்து கொண்டு வீட்டினுள் சென்றார். இதனால் கோபமுற்ற அந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்கம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் மற்றும் சில பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது!

மேலும், ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள நாகராஜன் அலுவலகத்தையும் மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஜெய்ஹிந்த் புரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் நாகராஜன்.

அந்த புகாரில், (நேற்று) மாலை 6.45க்கு வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு புறப்பட வீட்டின் முன்பிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது நேதாஜி தெருவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 20) என்பவர் கையில் பெரிய வாளுடன், கூடவே அடையாளம் தெரியாத 3 பேர் கைகளில் கத்தி, வாள்களுடன் அசிங்கமாக திட்டிக்கொண்டே என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள். அப்போது அங்கு நின்றிருந்த என் மனைவி என்னை வீட்டிற்குள் இழுத்து என்னை காப்பாற்றினார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் வாசலில் நின்றிருந்த வாகனம், வீட்டுக் கதவு ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தினார்கள். அடுத்து என் அலுவலகத்துக்கு சென்ற அந்த கும்பல் அங்குள்ள கதவையும் சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டார்கள். என புகாரில் தெரிவித்து இருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை துணை மேயர் நாகராஜன் மீது நடத்தபட்ட கொலை முயற்சி சம்பவம் குறித்தும், வீடு , அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தின் முன்னர் மதுரை எம்பி சு.வெங்கடேசன் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்படும் என உறுதியளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மதுரை துணை மேயர் நாகராஜன் கொடுத்த புகாரின் பெயரில் , லோகேஷ் எனும் 20 வயது இளைஞர், சீனி முகமது இஸ்மாயில் எனும் 20 வயது இளைஞர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை துணை மேயர் நாகராஜன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டம் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களாக நாகராஜன் மக்கள் பணியில் நற்பெயருடன் செயல்பட்டு வருகிறார்.  அவர்மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி மற்றும் வீடு, அலுவலகம் தாக்குதலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தில் உள்ள சந்துகளின் மூலம் தப்பி செல்லாத வண்னம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தி உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.