4 கோடி பறிமுதல்..நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணமா..? பாஜக நிர்வாகி கைது..!

Election2024:  சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும்படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும்படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்துள்ளனர். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ரூ.500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொண்டு செல்லப்பட்டவர்களில், ஒருவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதால் இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணமா..? என விசாரணை நடைபெறுகிறது.

இதற்கிடையில் நைனார் நாராகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு  சோதனை செய்யும்போது ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan