சாதி, மத மோதல்களை தவிர்க்க சமூக அமைதி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் – முதல்வரிடம் அமைச்சர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை!

சாதி, மத மோதல்களை தவிர்க்க தமிழகத்தில் சமூக அமைதி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என முதல்வரிடம் அமைச்சர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சாதி, மத மோதல்களை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேட முயல்வோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சமூக அமைதி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரின் பேச்சு சகோதர மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்தது என்பதால் அவர் கைது செய்யப்பட்டதையும், நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ வழிபாட்டு கூடம் இருக்கக்கூடிய இடத்தில் நடு இரவில் விநாயகர் சிலையை சிலர் வைத்துச் சென்றதையும் சுட்டி காண்பித்துள்ளார்.

இது போல சாதி, மத மோதல்கள் உருவாக்கி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் அடைய திட்டமிட்டு செயலாற்ற கூடிய அனைவரையும் மாவட்ட ரீதியாக அடையாளம் கண்டு, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த சமூக அமைதி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், இந்த சமூக அமைதியை ஏற்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
Rebekal