“முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடுகளில் புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது” – அமைச்சர் எ.வ.வேலு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது நண்பர்களது வீடுகளில் புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் 42, சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத்தொகை கைப்பற்றப்பட்டதாகவும், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், நிறுவனங்களுக்கிடையே பரிவர்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எம்.எல்.ஏ விடுதியில் எஸ்.பி.வேலுமணி அவர்களின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் 9 நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதேபோல் வேலுமணி வீட்டில் லாக்கர் சாவியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையில் எஸ்.பி.வேலுமணியிடம் சென்னை எம்எல்ஏக்கள் விடுதியில் நடத்தப்பட்ட விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது நண்பர்களது வீடுகளில் புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது என்று மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்

கோவையில் 5 மாவட்டங்களின் பொதுப்பணித்துறை,நெடுஞ்சாலை துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.அதன்பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

“ஏதும் திட்டமிட்டோ அல்லது எந்த விதமான முன்விரோதத்துடனோ முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது நண்பர்களது வீடுகளில் திமுக அரசு சோதனை நடத்தவில்லை.குறிப்பாக,அவர்களை பழிவாங்கும் நோக்கம் இந்த அரசுக்கு கிடையாது.

ஏனெனில்,ஒரு புகார் கொடுக்கப்படும்போது அதன் அடிப்படையில் FIR போடப்பட்டு,விசாரணை நடத்தப்பட்டுள்ளது.விசாரணைக்கு பின்னர் என்ன நிலவரம் என்பதை காவல்துறைதான் முடிவு செய்யும்”,என்று தெரிவித்துள்ளார்.