ஞாயிறு, விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம் – நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளன. மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்து ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிகிழமை வரை) காலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ இரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் (Peak Hours) காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் (Non-poak bours) 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த 21 முதல் நேற்று வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 46 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.9200 வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்