33 ஆண்டுகள்… எம்பி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்!

Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் பதவி வகித்து ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 49 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 5 எம்பிக்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அதிலும் குறிப்பாக 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்தங்களை ஏற்படுத்தியதற்காக அறியப்பட்ட மன்மோகன் சிங், 1991 அக்டோபரில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார். நரசிம்மராவ் அரசாங்கத்தின் கீழ் மன்மோகன் சிங் 1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார்.

இந்த நிலையில், 91 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகு, காலியாக இருக்கும் இடத்தை நிரப்ப காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார். எனவே, 33 ஆண்டுகால பயணத்தை முடிக்கும் மன்மோகன் சிங்குக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்