மணிப்பூர் வன்முறை: நிலைமை கட்டுக்குள் வந்தது – இந்திய ராணுவம்!

மணிப்பூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக இந்திய ராணுவம் தகவல்.

மணிப்பூர் மாநிலத்தில் மோரே கிராமத்தில் குக்கி, மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இரு இன குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மணிப்பூர் ஆளுநர் அனுமதி வழங்கினார்.

கலவரத்தை அடக்கும் நோக்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டு, காவல்துறை, ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், மணிப்பூரில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இரு இன குழுக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை நடந்த பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும், வன்முறை நிகழ்ந்த பதற்றமான பகுதிகளில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர் எனவும் கூறியுள்ளனர். எனவே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் மணிப்பூரில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

அசாமில் உள்ள 2 விமானநிலையங்களில் இருந்து IAF ஆனது C17 Globemaster மற்றும் AN 32 விமானங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ளப்டுகிறது. மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமை குறித்த பல போலி வீடியோக்கள் பரப்பப்படுவதைப் பற்றி இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.  அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை முகாம் மீதான தாக்குதலின் வீடியோ உட்பட மணிப்பூரில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்த போலி வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. இதனை நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்