மணிப்பூருக்கும் பிரதமருக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் ஆர்எஸ்எஸ்-க்கு மட்டுமே பிரதமர்..! ராகுல் காந்தி..

பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தம் மணிப்பூரை எரித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர். மேலும், அண்மையில் இரு பெண்களை ஆடையின்றி ஒரு கொடூர கும்பல் இழுத்து சென்ற வீடியோ, கூட்டு பாலியல் பலாத்கார செய்திகள் என மணிப்பூர் பற்றி வெளியான தகவல்கள் நாட்டையே உலுக்கியது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க கோரியும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும் தொடர்ந்து 6வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரதமர் ஏன் மணிப்பூருக்குச் சென்று அதைப் பற்றி பேசவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.  ஏனென்றால், நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ்-ன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரதமராக இருக்கிறார். அவருக்கும் மணிப்பூருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது சித்தாந்தம் மணிப்பூரைக் கொளுத்தியது அவருக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக-ஆர்எஸ்எஸ் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறது. அதிகாரத்தைப் பெற எதையும் செய்வார்கள். அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள், முழு நாட்டையும் எரிப்பார்கள். அவர்கள் நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று அந்த வீடியோவில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி கூறினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.