பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம் : திமுக எம்எல்ஏ மகனை பிடிக்க 3 தனிப்படைகள்.!

பல்லாவரம் திமுக எம்.பி கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் திருவான்மியூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.  அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சிறுமியை இவர்கள் அதிகமாக வேலை வாங்கியதாகவும்,  வேலை செய்யவில்லை என்றால் கடுமையாக தாக்கியதாகவும் சிறுமி வீடியோ மூலம் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து நீலாங்கரை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட உளுந்தூர் பேட்டை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சிறுமியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து நேரடியாக வாக்குமூலம் பெற்றனர். அதற்கு கடந்த 6,7 மாதங்களுக்கு மேலாக அவர்கள் துன்புறுத்தியதாக கூறினார்.

திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள்

சிறுமி வாக்குமூலத்தை அடுத்து ஆண்டோ, மெர்லினா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி,  தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனது மகனுக்கு 7 வருடம் முன்பு திருமணம் ஆகி தனியே வசித்து வருகிறார் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. சட்டம் கடமையை செய்யும் என தனது தரப்பு விளக்கத்தை தனியார் செய்தி சேனல்கள் வாயிலாக அளித்து இருந்தார்.

சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், சரியாக வேலை செய்யவில்லை என கூறி அடித்து துன்புறுத்தியதாகவும் பல்வேறு சம்பவங்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணைக்கு ஆஜராக ஆண்டோ மற்றும் மெர்லினாவை காவல்துறை கூறியதாக தெரிகிறது.

ஆனால், தற்போது ஆண்டோ மற்றும் மெர்லினா எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என்பதால், தலைமறைவாக இருக்கும் ஆண்டோ, மெர்லினாவை பிடிக்க 3 தனிப்படைகளை நீலாங்கரை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.