“இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்” -2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா?,அல்லது இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்துவதா? என்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அவர்கள் நேற்று அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டறிந்த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக,அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள நிலையில்,தற்போது,சென்னை,மதுரை,ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.மேலும்,தனது ட்விட்டர் பக்கத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள கமல்ஹாசன் கூறியதாவது:

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வெற்றி வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிடுகிறேன்.தகுதி மிக்க இவர்களைத் தலைவர்களாக்குங்கள்.வெற்றி பெறச் செய்யுங்கள்”,என்று தெரிவித்துள்ளார்.