ராஜகண்ணப்பன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ராஜகண்ணப்பன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்த ராஜகண்ணப்பன், தற்பொழுது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜகண்ணப்பனை இலாகா மாற்றியது மட்டும் போதாது, அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும்  கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு மதுரையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கே பாலகிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது எனவும், அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்ற கவலை எழுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிரான திமுகவின் போராட்டத்துக்கு ஆதரவாக அரசியல் நட்பு ரீதியாக நாங்கள் துணை நிற்போம் எனவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal