கோடநாடு வழக்கு – குற்றச்சாட்டப்பட்ட 4வது நபரிடம் தனிப்படை விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் விபத்தில் இறந்த கனகராஜ் பணிபுரிந்த உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோடநாடு வழக்கில் 10 நபர்கள் மீது குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அவர்களில் 4வது நபரான ஜம்ஷீர் அலியிடம் இன்று ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கோடநாடு விவகாரம் தொடர்பாக ஜாமினில் தளர்வுகள் கேட்ட வாளையார் மனோஜ் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது. ஜாமீனில் தளர்வுகள் கேட்ட மனு மீதான விசாரணையை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடைவிதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கோடநாடு வழக்கு தீவிரமடைந்துள்ளது. அதன்படி, இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு மேலும் துரிதப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்றும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்பது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்