கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சயானிடம் இன்றும் தீவிர விசாரணை!

கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.

இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோடநாடு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  கடந்தாண்டு உதகை காவல்துறை விசாரணை நடத்திய போது முதல் நபராக விசாரிக்கப்பட்ட சயானிடம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது. இதன்பின், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் தனிப்படை போலீசார் மீண்டும் நேற்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று நடந்த விசாரணையில், சயானிடம் கொள்ளை சம்பவத்துக்குத் திட்டமிட்டது யார், இந்த சம்பவம் எப்படி நடந்தது, உயிரிழந்த கனகராஜூடன் எப்படி அறிமுகம் ஏற்பட்டது என்று உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்