கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் பத்திரமாக மீட்பு

Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர்.

கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற இளைஞர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, பள்ளத்தில் விழுந்த இளைஞர் தன்ராஜை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை அறவே தவிர்க்க வேண்டும் எனவும் அது போன்ற இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுக்கக்கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.