மார்க்சிஸ்ட் கம்.கட்சி முக்கிய பிரமுகர் மறைவு – முதல்வர் இரங்கல்!

கேரளா:சிபிஐ (எம்) மத்திய குழு உறுப்பினர் எம்.சி.ஜோஸ்பின் காலமானதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எம்.சி. ஜோஸ்பின் (வயது 74) கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.சிபிஐ(எம்) கட்சியின் 23-வது கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜோஸ்பின் சனிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று கூறப்படுகிறது.

முதல்வர் இரங்கல்:

இதனையடுத்து,அவரது மறைவுக்கு சிபிஐ(எம்) கட்சியினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”பெண்கள் மற்றும் ஊழியர்களின் முன்னேற்றத்திற்காக ஜோஸ்பின் அயராது பாடுபட்டவர்.மகிளா சங்கத்தின் தலைவியாகவும்,மாநில மகளிர் ஆணையத் தலைவியாகவும் இருந்த ஜோஸ்பின், பெண்களுக்கு நீதி கிடைக்க தலையிட்டார். அவரது மறைவு மாநிலத்தில் உள்ள முற்போக்கு இயக்கத்திற்கு பேரிழப்பாகும்,” என்றார்.

யார் இவர்:

சிபிஐ(எம்) கட்சியின் மகளிர் பிரிவான ஜனாதிபத்ய மகிளா சங்கத்தின் தேசிய துணைத் தலைவராகவும் ஜோஸ்பின் பணியாற்றியுள்ளார். 1970 களின் இறுதியில் மாணவர் அரசியலின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இறங்கி 1987 இல் CPI(M) மாநிலக் குழு உறுப்பினராகவும், 2003 இல் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் ஆனார்.

சர்ச்சைக்குரிய கருத்து:

இதனைத் தொடர்ந்து,ஜோஸ்பின், 2017 முதல் 2021 வரை கேரள மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.இந்த தருணத்தில் ஜூன் 2021 இல் குடும்ப வன்முறை குறித்து தன்னிடம் புகார் அளித்த ஒரு பெண்ணிடம் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் கமிஷன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.