மீண்டும் மிரட்ட வருகிறதா கைதி-2.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் அடுத்த படத்தை தயாரிக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அதில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பின்னரே லோகேஷ் கனகராஜ் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க போவதாகவும், அதனை கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அதற்கான பணிகளை ஆரம்பிக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக அடுத்த வருடம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தினை குறித்த புது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அது கைதி படத்தின் இரண்டாம் பாகமாகவோ அல்லது புதிய கதையை கொண்டதாகவோ இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.