#JustNow: ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து கொலை.. வங்கி ஊழியரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்!

குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எலாகி டெஹாட்டி (Ellaqui Dehati Bank) வங்கியின் ஊழியர் விஜய் குமார் வங்கி வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கவாதிகள் தாக்குதலை தொடர்ந்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி ஊழியர் விஜய் குமார் வழியிலேயே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வங்கி ஊழியர் விஜய் குமார் சமீபத்தில் தான் குல்காமில் உள்ள வங்கி கிளையில் சேர்ந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாதிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. ஏற்கனவே அதே மாவட்டத்தில் காஷ்மீர் பெண் பள்ளி ஆசிரியர் ரஜ்னி பாலாவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. மே 31ல் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், வெளி மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுபோன்று, மே 12ம் தேதி, புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் ராகுல் பட் என்ற காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார். பள்ளி ஆசிரியர் ரஜ்னி பாலா, ராகுல் பட், விஜய் குமார் என அடுத்தடுத்து பயங்கரவாதிகளால் கொலை சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், ஆண்டு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பயங்கரவாதிகளின் தொடர் கொலை சம்பவத்தை  தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததற்கு எதிராக காஷ்மீரி பண்டிட் சமூகத்தின் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கொலை செய்து வருவதால், அங்கு ஏற்பட்டுள்ள அசாரண சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நாளை உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment