#Justnow:ஞானவாபி மசூதி வழக்கு – இன்று நீதிமன்றம் விசாரணை!

உத்திரபிரதேசம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.அதனை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், மசூதி வளாகத்திற்குள் கள ஆய்வு செய்யவும் அதை வீடியோவாக பதிவு செய்யவும்  வாரணாசி  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,மசூதி  வளாகத்துக்குள் கள ஆய்வு செய்தபோது சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,மசூதி நிர்வாகம் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு,ஆய்வு விவரங்களை கசிய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.மேலும்,ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை பாதுகாக்கவும், இசுலாமியர்களை வழிபாடு மேற்கொள்ளவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 8 வாரங்களுக்கு அமலில் இருக்கும் எனவும்,குறிப்பாக இவ்வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் கடந்த மே 20 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,ஞானவாபி மசூதி வழக்கு இன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவு 8 வாரங்களுக்கு அமலில் உள்ள நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக  வாரணாசி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜய் கிருஷ்ணர் இன்று விசாரணையை தொடங்குகிறார்.

Leave a Comment