இனி பிறப்பு சான்றில் இது கட்டாயம்… மத்திய அரசு போட்ட புதிய ரூல்ஸ்!

Birth Registration: பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தாய், தந்தை ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிட வேண்டும் என அறிவிப்பு.

குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் போது அந்த குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது பிறப்பு சான்றில் இனி குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் மதத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தப்பட்ட மசோதாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மாநில அரசுகள் இந்த விதிகளை முறையாக ஏற்றுக்கொண்டு, இந்த புதிய விதிமுறை குறித்த அறிவிப்பை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு வரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வந்தது.

தற்போது புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதால், பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளது. அந்த படிவத்தில் தாயின் மதம், தந்தையின் மதம் என்ன? என்று தனித்தனியே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரில் தேர்வு செய்வதற்கான டிக் மார்க் போடும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், தங்களது மதம் என்னவென்று டிக் செய்ய வேண்டும். மேலும், இந்த புதிய விதிமுறை குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை மீது பல்வேறு விமர்சனகள் எழுந்த நிலையில், இது முழுக்க முழுக்க புள்ளிவிவரத்துக்கானது, பெற்றோரின் மதம் என்பது புள்ளி விவர தகவலுக்காகவே பெறப்படுகிறது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்