இஸ்ரேல் – பாலஸ்தீனம்.. சமநீதி கிடைக்க வேண்டும்.! அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை.! 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் 4வது நாளாக தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்து இருந்த காசா பகுதியை கைப்பற்றி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது.

இந்த போரில் இதுவரை இரு நாட்டை சேர்ந்தவர்களும் சுமார் 1600 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான மோதலில் உலக நாடுகளில் பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சில நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

போரை நாங்கள் தொடங்கவில்லை…ஆனால் முடித்துவைப்போம் – ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல்!!

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனியின் அதிபர் ஷோல்ஸ், இத்தாலியின் பிரதமர் மெலோனி, இங்கிலாந்து பிரதமர் சுனக் மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதி பிடன் ஆகியோர்  இஸ்ரேலுக்கு ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கிறோம். ஹமாஸ் படைகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த கூட்டறிக்கையில், ஹமாஸின் பயங்கரவாதச் செயல்களுக்கு எந்தவித நியாயமும் இல்லை, உலகலாவிய கட்டுப்பாடுகளை மீறி ஹாமாஸ் செயல்படுகிறது.  இது கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. கடந்த சில நாட்களாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பல குடும்பங்களைக் கொன்று குவித்ததும், ஒரு விழாவில் புகுந்து 200 இளைஞர்களைக் கொன்று குவிப்பதும், வயதான பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கடத்திச் சென்றதும் உலகளவில் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது.

இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் இஸ்ரேலின் முயற்சிகளுக்கு எங்கள் நாடுகள் துணை நிற்கும். இந்த சமயத்தில் எந்த தரப்பும் (எந்த நாடும்) இஸ்ரேலுக்கு விரோதமாக தாக்குதல்களை நடத்த இது ஏற்ற தருணம் அல்ல என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பாலஸ்தீனிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை நாங்கள் அனைவரும் ஆதரிக்கிறோம். மேலும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சமமான நீதி மற்றும் சுதந்திரம் கிடைக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ஹமாஸ் அமைப்பு அப்படி எந்த பாலஸ்தீனகோரிக்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்த செயல் பாலஸ்தீன மக்களுக்கு பயங்கரவாதத்தையும், இழப்பையும் தான் பெற்று தரும்.

வரவிருக்கும் நாட்களில், இஸ்ரேல் தன்னைத் தற்காத்து கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், இறுதியில் அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான நிலைமைகளை அமைப்பதற்கும், இஸ்ரேலின் நட்பு நாடுகளாகவும், பொதுவான நண்பர்களாகவும் நாம் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயல்படுவோம். என வெள்ளை மாளிகை வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்ப்பிடப்படுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.